Skip to content

சமூக வலைதள மோதல்: முதியவர் சுட்டுக்கொலை

அரியானா மாநிலம் நூக் மாவட்டத்தில் உள்ள கேர்லா கிராமத்தில் குர்ஷித் (55) என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அந்த ஊரில் உள்ள சிறுவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சிறுவர்களுக்கு இடையிலான இந்த பிரச்சனை பெரியவர்கள் வரை சென்றது. நேற்று மாலை சுமார் 4:30 மணியளவில், பாதிக்கப்பட்ட குர்ஷித் (55) அந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ஜாவேத் மற்றும் பரித் ஆகியோருக்கும் குர்ஷித்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஜாவேத் மற்றும் பரித் தாங்கள் வைத்திருந்த சட்டவிரோத துப்பாக்கியால் குர்ஷித்தை சுட்டனர். இதில் குண்டு பாய்ந்த குர்ஷித் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குர்ஷித்த்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய ஜாவேத், பரித் மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் கலவரம் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு அந்த பகுதியில் போடப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!