குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு குறைத் தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்று தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்கினர். பெரும்பான்மையாக பெற்றோர்களை இழந்த மாணவர்கள் , தாய் அல்லது தந்தை ஒருவரை இழந்த மாணவர்கள் பங்கு பெற்று தங்கள் கல்வியை தொடர விரும்புவதாகவும் அதற்கான பொருளாதார மற்றும் தங்கும் வசதி உள்ளிட்ட உதவிகளை செய்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் உயர்கல்வி பயில பொருளாதார ரீதியாக சிரமப்படுவதால் தங்களுக்கு கல்வி கடன் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழந்தை தொழிலாளர்
முறை எதிர்ப்பு தின உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்புக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் அனைத்து துறை சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்கள் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜன் , பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் பங்கு பெற்றனர்.

