Skip to content

விதிமீறல் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை… கோவை கலெக்டர் எச்சரிக்கை…

  • by Authour
கோவை, பொள்ளாச்சி அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமல் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பவன்குமார், விதிமீறல் கல்வாரிகள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட வடபுதூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) தணிகாசலம் முன்னிலை வகித்தார். இதில் வருவாய்த்துறை, வேளாண்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, விலையில்லா சலவைப் பெட்டி, வேளாண் கருவிகள் மொத்தம் 149 பயனாளிகளுக்கு ரூ. 6 கோடியே 20 லட்சத்து 11 ஆயிரத்து 601 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் பேசுகையில், பள்ளிக்கல்வியை முடித்து மேற்படிப்புக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த கல்வியாண்டில் கோவை மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோன்று நடப்பு ஆண்டிலும் மாணவர் சேர்க்கை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது குறிப்பாக தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவை மாணவர்களின் உயர்கல்விக்கு பெரிதும் துணை நிற்கிறது. கிராமப்புற பெண்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதனை கிராம மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குதல், தொழில் முனைவோராக உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இது குறித்து வட்டம் தோறும் நடத்தப்படும் மக்கள் தொடர்பு முகாமில் விரிவாக விளக்கமாக தெரிந்து கொள்ள கண்காட்சிகளும் நடத்தப்பட்டு, அதில் கிராமப்புற பெண்களுக்கு திட்டங்கள் குறித்து முறையாக விளக்கமும் அளிக்கப்படுகிறது. தற்போது பருவ மழை தொடங்கியுள்ளது. வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேங்கும் மழை நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். ஆகவே பொதுமக்கள் இவற்றை தவிர்க்க விழிப்புடன் இருக்க வேண்டும். கிராமப்புற மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் மேம்பட அரசு சார்பில் இலவச இடம் வழங்குவதோடு அதில் வீடுகளும் கட்டிக் கொடுக்கும் நடவடிக்கைளும் அரசு சார்பில் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு தாசில்தார் கணேஷ் பாபு, கிணத்துக்கடவு தி.மு.க. ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மழைக்காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்து வருகிறது. ஏற்கனவே கோவை மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு குழு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்ட தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறப்பு கண்காணிப்புகுழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகள் அனுமதி இன்றி செயல்படுகின்றனவா, விதிமீறல்களில் ஈடுபடுகின்றனவா என தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு விதிமீறும் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
error: Content is protected !!