வேலூரை சேர்ந்தவர் வேல்முருகன் (39 ). இவருக்கு ஆஷா என்ற மனைவியும், சர்வேஷ் (11 ), சாத்விக் (8 ) என 2 மகன்களும் உள்ளனர். வேல்முருகன் வேலூர் தெற்கு போலீஸ் ஸ்டேசனில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கினார். அதில் பலத்த காயமடைந்து மாற்றுத்திறனாளியானார். இதனால் வேல்முருகன் கஸ்பாவில் உள்ள புறக்காவல் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்..
விபத்து ஏற்பட்டதில் காலில் அடிப்பட்டு நடக்க முடியாமலும், இதனால் அவர் தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வேல்முருகன் நேற்று முன்தினம் இரவு பணி முடித்து விட்டு தனது 3 சக்கர வாகனத்தில் வசந்தபுரம் சுடுகாட்டு எரிமேடைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
வேல்முருகன் இரவில் வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வசந்தபுரம் சுடுகாடு வழியாக ஆடு மேய்க்க சென்றவர்கள் எரிந்த நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தெற்கு போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அதில் இறந்து கிடந்தவர் போலீஸ் ஏட்டு வேல்முருகன் என்பது தெரியவந்தது.

