சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12 வரை ஆசிய சர்பிங் கூட்டமைப்பு சார்பில் 4-வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியை தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து ரூ.3.30 கோடி செலவில் நடத்துகிறது. இந்தத் தொடரில் இந்தியா, ஜப்பான், கொரியா, குவைத், லெபனான், சவுதி அரேபியா, சீன தைபே, உஸ்பெகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இவர்கள் ஷார்ட்போர்டு பிரிவுகளில் போட்டியிடுவார்கள். ஓபன் பிரிவில் ஆடவர், மகளிர், 18 வயதுக்குட்பட்ட சிறுவர், மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுமியர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் தாமிரம் பதக்கங்கள் வழங்கப்படும். இந்தத் தொடர் வரும் 2026-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இறுதி தகுதி சுற்று போட்டியாக அமைந்துள்ளது. மேலும் ஷார்ட்போர்டு பிரிவில் முதலிடம் பெறும் வீரர், வீராங்கனை இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.