Skip to content

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு..!

தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு வங்கம் – வங்கதேசம் கடற்கரை பகுதிகளில், சாகர் தீவுகளுக்கும் – கேபுபாராவுக்கும் (வங்கதேசம்) இடையே நேற்று கரையை கடந்தது. தமிழகத்தில் இன்று (மே 30) ஒருசில இடங்களில், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல்மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
error: Content is protected !!