டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு
திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் 2 -வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் நைனார் காஜா (வயது 62). ரிவர் பொன்னேரிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம்போல் இவர் கடையை பூட்டிவிட்டு இரவு வீட்டுக்குச் சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது டீக்கடையின் பின்பக்க கதவு போட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூபாய் 70 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து நைனார் காஜா பொன்மலை போலீசில் புகார் செய்தார் .அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கடையில் பணத்தை திருடிய கொட்டப்பட்டு ஜே.ஜே.நகர் கருப்புசாமி நகர் பகுதியைச் சேர்ந்த லியோ (வயது 20) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். கைதான லியோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். சிறுவனை குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி உறையூரில் போதை மாத்திரை விற்பனை
திருச்சி உறையூர் மார்க்கெட் அருகாமையில் ஒரு மர்ம நபர் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அப்போது உறையூர் மார்க்கெட் கழிப்பிடம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் அங்கிருந்து நைசாக தப்பி செல்ல முயன்றார். உஷாரான போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்த போது போதை மாத்திரை விற்பனை செய்தது உறுதியானது. அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த
அரவிந்த் என்கிற வெள்ளை ராஜா (28 ) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 70 போதை மாத்திரைகள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.