அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது வங்காரம் கிராமம். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில், செல்வராஜ் என்பவர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
தொடக்கப்பள்ளியில் பயின்ற சிறுமிகளிடம் ஆசிரியர் செல்வராஜ் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது . இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள், ஆசிரியர் செல்வராஜை கைது செய்யக்கோரி, பள்ளிக்கு பூட்டு போட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த தளவாய் காவல்துறையினரும், அரியலூர் தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அலுவலரும் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் பள்ளிக்கு பெண் ஆசிரியர்கள் பணி அமர்த்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அருகிலுள்ள அரசுப் பள்ளியில் உள்ள பெண் ஆசிரியரை வரவழைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்த ஒத்துக்கொண்டதையடுத்து பொதுமக்கள் பள்ளியை திறந்தனர். மேலும் சிறுமிகள் மீது பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில், இன்று அதிகாலையில் காவல்துறையினர் ஆசிரியர் செல்வராஜை கைது செய்து, அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
