ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலை இணையும் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் வாலிபர் ஒருவர் நேற்று இரவு தனது பைக்கின் முன்பகுதியில் பட்டாசுகளை வைத்து வெடிக்க செய்தார். மேலும் சாலையில் வீலிங் செய்து அபாயகரமான சாகசத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு பின்னால் காரில் வந்தவர்கள் கடும் அச்சத்துக்கு உள்ளாகினர்.
இந்த சாகசம் செய்ததால் பின்னால் வந்த வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டது. இந்த காட்சியை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த ஆபத்தான சாகசத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். இவ்வாறு பொது வெளியில், மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.