சென்னையில் போராட்டம் நடத்திவந்த தற்காலிக தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து போகீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் இராயபுரம், திருவிக நகர் ஆகிய இரு மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தில்லி எம்.எஸ்.டபிள்யூ சொலுஷன்ஸ் லிமிடெட் (Delhi MSW Solutions Ltd) என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு மண்டலங்களிலும் 5180 தூய்மைப் பணியாளர்கள் குப்பை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் நிரந்தரப் பணியாளர்கள் அம்பத்தூர் மண்டலத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து கடந்த 13 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசுடன் 7 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், உடன்பாடு எட்டப்படவில்லை. அதேநேரம் இந்த போராட்டத்தால் 20 லட்சம் மக்களுக்கான பொது சுகாதார சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்தது. அத்துடன் இந்த புதிய முறையின்கீழ் இதுவரை கிடைக்காத பணிப்பாதுகாப்பும் , பி.எஃப், போனஸ், இஎஸ்ஐ, பண்டிகைகால சிறப்பு உதவிகள், திருமண உதவித்தொகை, காப்பீடு, ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை, தேசிய விடுமுறை நாட்களில் இரட்டிப்பு சமபளம் என பல சலுகைகளும் இந்தப் பணியாளர்களுக்கு கிடைத்திட வழி செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்திருந்தது.
இருப்பினும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இதனிடையே சென்னை உயர்நிதிமன்றம், சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்துமாறும், மீறினால் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தியும், அவர்கள் மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊழியர்களை போலீஸார் கைது செய்து சமுதாய கூடங்களில் தங்க வைத்துள்ளனர்.