தனது அண்ணன் மறைவுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்ணனுமான மு.க.முத்து நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் மு.க.முத்துவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அத்துடன் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அவ்வாறு தனது அண்ணன் மு.க. முத்து மறைவுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது அண்ணன் திரு. மு.க.முத்து அவர்களது மறைவுக்கு நேரில் வந்து எங்களது துயரில் பங்கெடுத்து ஆறுதல் சொன்ன சகோதரர் திரு. செல்வப்பெருந்தகை, தோழர் திரு. கே.பாலகிருஷ்ணன், சகோதரர் எழுச்சித் தமிழர் திரு. தொல்.திருமாவளவன், பேராசிரியர் காதர் மொகிதீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, திரு. தமிமுன் அன்சாரி, திரு. வசீகரன், சகோதரர் துரை வைகோ, சகோதரி தமிழிசை சௌந்தரராஜன், திரு. கரு.நாகராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரு. சத்யராஜ், திரு. விக்ரம் உள்ளிட்ட கலையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் – ஊடகவியலாளர்கள், நேரில் வர முடியாத சூழலில் தொலைபேசி வாயிலாக இரங்கலைப் பகிர்ந்துகொண்ட சகோதரர் திரு. ராகுல் காந்தி, திரு. ஓ.பன்னீர்செல்வம், திரு. ஜி.கே.வாசன் மற்றும் எனது இல்லம் தேடி வந்து ஆறுதல் தெரிவித்த திரு. சீமான் உள்ளிட்ட அனைவர்க்கும் நன்றி!” என்று குறிப்பிட்டுள்ளார்.