அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது ஆதிகுடிகாடு கிராமம். இங்கு செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சுற்று வட்டார கிராம மக்கள் இந்த செல்லியம்மனை வழிபட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் அதிகாலையில் கோயில் இரும்புக் கதவுகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த இரண்டு திருடர்கள், கோயில் உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அரை நிர்வாண கோலத்தில் கோயிலுக்குள் நுழைந்த திருடன் ஒருவன் தான் அணிந்து வந்த, உள் பனியனை கழட்டி முகத்தை மறைத்துக் கொண்டும், மற்றொரு திருடன் லுங்கியால் உடல் முழுவதையும் மறைத்துக்கொண்டும் கைவரிசை காட்டி உள்ளனர்.
கண்காணிப்பு காமிராவில் தங்களை அடையாளம் காணமுடியாத வண்ணம், நீண்ட போராட்டத்திற்கு பின் பூட்டை உடைத்து கோயிலுக்குள் நுழையும் காட்சிகள் பதிவாகியுள்ளது. நேற்று காலை வழக்கம் போல கோயிலை திறந்த பூசாரி கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த செந்துறை காவல்துறையினர், திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.