விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவனின் சகோதரி பானுமதி நினைவு நாளை ஒட்டி அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், அங்கனூரில் 5ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் தொல் திருமாவளவன் கூறியதாவது:
தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அதிகரித்து வரும் ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசி உள்ளோம். தேசிய அளவில் ஜாதியின் பெயரால். மதத்தின் பெயரால் நடக்கும் படுகொலைகளை தடுக்க வேண்டும் என ஜனநாயக சக்திகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் ஒன்றிய அரசு இது குறித்து பொருட்படுத்தவில்லை.
உச்ச நீதிமன்றமே சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என கூறி உள்ளது. சட்டம் இயற்றும் வரை ஆணவ கொலைகளை தடுக்க
உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் காவல் துறைக்கு சில வழிக்காட்டல்களை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. ஆனால் எந்த மாநில காவல் துறையும் அதை பின்பற்றுவதில்லை.
இந்த சூழலில் ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 11ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். 9 ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றி மற்ற மாநில அரசுகளுக்கு தமிழக அரசு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பட்டியலை நிறைவேற்றி வருகிறது. அதில் பல தில்லு முல்லு நடந்து வருவதாக தெரிகிறது.
பா.ஜ.க விற்கு ஆதரவாக அந்த திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனை நாடாளுமன்ற த்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் என்பது தான் கோரிக்கை ஆனால் அதனை விவாதிக்க ஒன்றிய அரசு தயங்குகிறது. தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் இது ஜனநாயக விரோதம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாகவே தெரிகிறது .தேர்தல் ஆணையம் பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது .இது நாட்டிற்கு மிகுந்த ஆபத்தானது. நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் .தமிழ்நாடு அரசும் இது தொடர்பாக விவாதம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
டெல்லியில் வெளிநாட்டு தூதரகங்கள் நிறைந்த பகுதியில் எம்பி சுதாவிடம் இருந்து நகை பறிப்பு சம்பவம் நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது .இது நம் நாட்டின் மீதான நன்மதிப்பிற்கு உலக அரங்கில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆனால் டெல்லி காவல்துறை இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என எம்.பி சுதா கூறியுள்ளார். இது தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் கூட்டணியாக உருவாகவில்லை. பாஜக, அதிமுக இரண்டு கட்சிகள் மட்டுமே இணைந்துள்ளன. திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தார்கள் ,அது அவர்களின் ஆசை ,ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தான், அதில் தொடர்வார்கள் என நம்பிக் கொண்டிருந்தவர்களே வெளியேறி உள்ளார்கள், இதுதான் அந்த கூட்டணியின் உறுதித் தன்மையாக உள்ளது . திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் சிலருக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாகவும் அவர்களை தங்கள் கூட்டணிக்கு வருமாறு பா.ஜ.க அழைப்பு விடுப்பதாகவும் தகவல்கள் வருகிறது .உங்களுக்கு அது போல் ஏதேனும் அழைப்பு வந்துள்ளதா என்கிற கேள்விக்கு அவ்வாறு எந்த அழைப்பும் எனக்கு வரவில்லை என தெரிவித்தார்.