Skip to content

திருவள்ளூர் ரயிலில் தீ : 17 மணி நேரத்திற்கு பின் இயல்புநிலை திரும்பியது

 சென்​னை​யில் இருந்து பெட்​ரோல், டீசல் ஏற்​றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று அதி​காலை திரு​வள்​ளூரில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து ஏற்​பட்​டது. இதில், 18 டேங்​கர்​கள் எரிந்து நாச​மானது. இந்த விபத்தால், விரைவு ரயில், புறநகர் மின்​சார ரயில் சேவை கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது.

சென்னை துறை​முகத்​தில் இருந்து 2 இன்​ஜின்​கள் கொண்ட சரக்கு ரயில், நேற்று அதி​காலை 3 மணி அளவில் வாலாஜா சைடிங் நிலை​யத்​துக்கு புறப்​பட்​டது. தலா 70 ஆயிரம் லிட்​டர் கொள்​ளளவு கொண்ட 45 டேங்கர்​களில் டீசலும், 5 டேங்கர்​களில் பெட்​ரோலும் நிரப்​பப்​பட்​டிருந்​தது.

நேற்று அதி​காலை 4.55 மணி அளவில் திரு​வள்​ளூர் ரயில் நிலை​யத்தை கடந்து சென்​ற​போது, 2 இன்​ஜின்​கள், ஒரு டேங்கர் ஆகியவை திடீரென தனி​யாக பிரிந்​த​தாக கூறப்​படு​கிறது. இதனால், ரயில் நிலை தடு​மாறி, 18 டேங்கர்​கள் அடுத்​தடுத்து தடம்​புரண்​டன. பெட்​ரோல், டீசல் நிரப்​பிய டேங்கர்​கள் ஒன்​றோடு ஒன்று மோதி​ய​தில் திடீரென தீப்​பற்​றிக்​கொண்​டது. மளமளவென மற்ற டேங்கர்​களுக்​கும் தீ பரவிய​தில், டேங்கர்​கள் வெடித்து சிதறின. இதனால், 100 அடி உயரத்​துக்கு நெருப்பு கொழுந்​து​விட்டு எரிந்​தது. திருவள்ளூரை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கரும்புகை  ஏற்பட்டது.

இதனால் பயந்துபோன  பொதுமக்கள் வீட்டை காலி செய்து விட்டு ஓட்டம் பிடித்தனர்.  உடனடியாக  திரு​வள்​ளூர், திரு​வூர், தேர்​வாய் கண்​டிகை சிப்​காட், ஸ்ரீபெரும்​புதூர், அம்​பத்​தூர் உள்பட  15க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து போராடி தீயை அணைக்க  போராடினர். ஆனாலும்  தீ கட்டுக்குகள் வரவில்லை.

திரு​வள்​ளூர் மாவட்ட ஆட்​சி​யர் பிர​தாப், எஸ்​.பி. சீனி​வாசபெரு​மாள் தலை​மை​யில் வரு​வாய் துறை​யினர், போலீ​ஸார், மின்​வாரிய அதி​காரி​கள் விரைந்து வந்​து, விபத்து பகுதி அருகே மின் இணைப்பை துண்​டித்​தனர். அப்​பகு​தி​யில் வசிக்​கும் 50 இருளர் குடும்​பங்​களை சேர்ந்​தவர்​கள் உடனடி​யாக அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தப்​பட்​டு, திரு​வள்​ளூர் பெரியகுப்​பம் பகு​தி​யில் தற்காலிக  முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்​டனர்.

இந்த விபத்​தில், டீசல் நிரப்பிய 14 டேங்கர்கள், பெட்ரோல் நிரப்பிய 4 டேங்கர்கள் முற்​றி​லும் நாச​மானது. . அந்த டேங்கர்​களில் இருந்த சுமார் ரூ.12 கோடி மதிப்​பிலான பெட்​ரோல், டீசல் எரிந்து நாச​மான​தாக தீயணைப்பு துறை​யினர் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அமைச்​சர் சா.​மு.​நாசர், தெற்கு ரயில்வே பொது மேலா​ளர் ஆர்​.எம்​.சிங் ஆகியோர் வந்​து, சீரமைப்பு பணி​களை பார்​வை​யிட்​டனர். தமிழக ரயில்வே காவல் துறை ஐ.ஜி. பாபு, காவல் கண்​காணிப்​பாளர் ஈஸ்​வரன் ஆகியோர் ஆய்வு செய்​தனர். தமிழக ரயில்வே காவல் துறை ஏடிஜிபி தலை​மையி​லான 3 தனிப்​படை​யினர் விபத்து குறித்து விசா​ரணை நடத்தினர். விபத்து குறித்து விசா​ரிக்க விசா​ரணை குழுவை அமைத்து தெற்கு ரயில்வே பொது மேலா​ளர் ஆர்​.என்.சிங் உத்​தர​விட்​டுள்​ளார்.

சரக்கு ரயில் தீ விபத்​தால், சென்னை – அரக்​கோணம் மார்க்​கத்​தில் விரைவு ரயில், புறநகர் மின்​சார ரயில் சேவை நேற்று கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது. சென்னை சென்ட்​ரல் – மைசூரு வந்தே பாரத் விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில், கோவை விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில், திருப்​ப​தி சப்​தகிரி விரைவு ரயில் உட்பட 8 ரயில்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. காச்​சிகுடா – செங்​கல்​பட்டு விரைவு ரயில் உட்பட 8 ரயில்​கள் மாற்​றுப் பாதை​யில் திருப்​பி​விடப்​பட்​டன.

நேற்று மாலை 6 மணி நில​வரப்​படி, 79 விரைவு ரயில்​களின் சேவை பாதிக்​கப்​பட்​டது. புறநகர் மின்​சார ரயில் சேவை​யும் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டதால், பயணி​கள் கடும் அவதிக்கு ஆளாகினர். ரயில் சேவை பா​திக்​கப்​பட்​டதால், அரசு போக்​கு​வரத்து கழகம்
(விழுப்​புரம் கோட்​டம்) சார்​பில் காட்பாடி, குடி​யாத்​தம்​, அரக்​கோணம்​,திரு​வள்​ளூர்​, திருத்​தணி ரயில்​ நிலையங்​களில்​ இருந்​து 270-க்​கும் மேற்​பட்​ட சிறப்​பு பேருந்​துகள்​ இயக்கப்​பட்​டன.

இன்று காலையில். அதாவது  17 மணி நேரத்திற்கு பின்னர்   3, 4  தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு ரயில்கள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

இருப்பினும் அரக்கோணத்திலிருந்து சென்னை செல்லும் மின்சார ரயில்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன.

இன்று மாலை முழுமையாக பணிகள் நிறைவு பெற்று ரயில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

error: Content is protected !!