திருச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று (09.06.2025) காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை துரை வைகோ எம்.பி. ஆய்வு செய்தார்.
காலை 8 மணிக்கு மணிக்கு M.I.E.T முதல் ELCOT IT Park வரை உள்ள 100 அடி Link சாலையில் களஆய்வு மேற்கொண்டார்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த M.I.E.T முதல் ELCOT IT Park வரை சாலை அமைத்துத்தர வேண்டும் என்று துரை வைகோ கோரிக்கை வைத்திருந்தார். அதனை ஏற்று அமைக்கப்பட்ட சாலையை இன்று அவர் பார்வையிட்டார். எம்.பியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக சாலை அமைத்துக்கொடுத்த மாநில நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகளுக்கு எம்.பி. நன்றி தெரிவித்தார்.
அந்தப் பகுதியில் உள்ள ஜங்ஷனில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் எம்.பி. சுட்டிக்காட்டி, . 100 மீட்டருக்கு சாலையை இருபுரத்திலும் அகலப்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
100 அடி சாலை முடிவிலிருந்து IT park வரை செல்லும் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு குறுகிய வளைவு பகுதி உள்ளதால் தொடர்ந்து விபத்துகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதையும் சரிசெய்து குறுகிய இடத்தை அகலப்படுத்தி ஒரே சீரான சாலை அமைக்க அதிகாரிகளிடம் எம்.பி. கோரிக்கை வைத்தார்.
IT park சந்திப்பு பகுதியிலும் சாலைகளை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அங்கு போதுமான அளவு விளக்குகள் அமைக்கவும் வலியுறுத்தினார். இதற்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்ததாக, சோழமாதேவி பகுதியில் உள்ள சாலைகளின் தரத்தை அதிகாரிகளிடம் எடுத்துரைத்து சாலைகளை அமைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
மேலும், சோழமாதேவி நகரில் உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு அகலமான புதிய பாலம் அமைத்துத்தர அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். நடப்பு ஆண்டின் ஒதுக்கீடுகள் முடிவடைந்தபடியால் அடுத்த நிதி ஆண்டில் அமைக்கலாம் என்றனர். ஏதாவது சிறப்பு நிதியை அடையாளம் கண்டு அதில் இங்கு புதிய பாலம் கட்டுவதற்கான ஆயத்த பணிகளை தொடங்க ஆவன செய்யுமாறு துரை வைகோ கேட்டுக்கொண்டார்.
அடுத்ததாக, திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பயணிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார். அங்கு பூட்டப்பட்டிருந்த கழிப்பறைகளைத் திறந்து விட வேண்டுமென பயணிகள் கேட்டனர். இதனை ரயில் நிலைய மேலாளரிடம் எடுத்துரைத்தபோது கழிப்பறைகளில் சில சமூகவிரோத நடவடிக்கைகள் நடப்பதாக கூறினார். அதற்கு, மொத்தமாக பூட்டிவிடுவது சரி அல்ல என்றும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், ரயில்கள் வரும் நேரங்களில் இரண்டு மணி நேரம் மட்டுமாவது கழிப்பறைகள் திறந்துவிடப்படுவது அவசியம் என்றும் கூறினேன். அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டனர்.
அடுத்ததாக, திருவெறும்பூர் ரயில் நிலையத்தையும் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தையும் இணைக்கும் கூடுதல் சாலையை அகலப்படுத்தி, சீரமைத்து சாலை அமைத்துத் தரவேண்டும் என்று எம்.பி. துரை வைகோ வலியுறுத்தினார்.
அங்கு உள்ள ரயில் பாதையை கடக்கும் போது விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், அதனால் அங்கு ஒரு சுரங்கப்பாதை அமைத்துத்தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று அதற்கான மூன்று இடங்களை அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.
ஒவ்வொரு இடத்திலும் சில தொழில் நுட்ப காரணங்களால் சுரங்கப்பாதை அமைக்க முடியாது என்று அதிகாரிகள் கூறினர். இருந்தாலும் சின்ன அளவிலாவது சுரங்கப்பாதை அமைக்க வழிவகை செய்துதர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து தெரிவிப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் பிறகு, அங்கு புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்தார். அங்கு சில அரசு அலுவலகங்கள் செயல்படுவதை பார்வையிட்டார். விரைவில் அந்த இடம் ஒப்படைக்கப்பட்டு பேருந்து நிலைய கட்டுமானப்பணி தொடங்கும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் எம்.பி. கூறினார்.
இறுதியாக பால்பண்ணை பகுதியில் உள்ள சென்னை – தஞ்சாவூர் பிரிவு சாலையை பார்வை யிட்டார்.
ஏற்கனவே இதுபோலவே இருந்த TVS Toll Gate பகுதியில் எடுக்கப்பட்ட சாலை விரிவாக்க நடவடிக்கையைப் போல, பால்பண்ணை பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டால், உரிய தீர்வுகள் கிடைக்கும். இதனை உயர் அதிகாரிகளிடம் நான் பேசுவேன் என்றும் எம்.பி. துரைவைகோ தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போதுமதிமுக நிர்வாகிகள், திமுக உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.