நகராட்சி கவுன்சிலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் இரண்டு நாட்கள் நடந்தது.இந்த பயிற்சி வகுப்பிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து நகராட்சி கவுன்சிலர்கள் அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் வந்து கலந்து கொண்டனர்.அவர்களுக்கு இங்கு 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி 20- வது வார்டு திமுக கவுன்சிலர் சங்கர் என்பவர் கை துப்பாக்கியுடன் வந்து கலந்து கொண்டார்.இந்தத் துப்பாக்கிக்கு அவர் முறைப்படி உரிமம் பெற்றுள்ளார்.ஓட்டலில் அவர் முகம் கழுவி விட்டு, கழிப்பறைக்கு சென்று விட்டு பயிற்சி கூட்டத்திற்கு மீண்டும் செல்லும்போது துப்பாக்கியை அங்கு வைத்து விட்டு மறந்துவிட்டார்.பயிற்சி கூட்டத்தில் வழக்கம் போல் கலந்து கொண்டார்.இதைப் பார்த்த அந்த ஓட்டலில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்கள் கை துப்பாக்கியை எடுத்து மறைத்து வைத்துள்ளனர்.இதற்கிடையில் துப்பாக்கி காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்த திமுக கவுன்சிலர் சங்கர், அங்குமிங்கும் ஹோட்டலில் பல இடங்களில் தேடினார்.ஆனால் துப்பாக்கி கிடைக்கவில்லை.உடனே இச்சம்பவம் குறித்து கன்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் சல்லடை போட்டு விசாரணை நடத்தினர்.ஹோட்டல் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர்.விசாரணையில் ஓட்டல் ஊழியர்கள் ஐந்து பேர் ஒன்றாகச் சேர்ந்து இதை எடுத்து மறைத்து வைத்தது தெரியவந்தது.தீவிர விசாரணைக்கு பின் வழக்கு பதிவு செய்த கண்டோன்மென்ட் போலீசார் வடமாநில தொழிலாளர்கள் 2 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி ஓட்டலில் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த திமுக கவுன்சிலரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி-ஓட்டலில் திமுக கவுன்சிலர் துப்பாக்கி திருட்டு-2 பேர் கைது
- by Authour
