திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று பிற்பகல் திமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. அமைச்சர் நேரு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் எம்பி அருண்நேரு, எம்எல்ஏக்கள் பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அந்தநல்லூர் ஒன்றிய குழு தலைவர் துரைராஜ், ஸ்ரீரங்கம் நகரம் நமக்கு சரியாக இல்லை. அதை சரிப்படுத்த வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார். இதை தொடர்ந்து எழுந்த ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார், 2021 தேர்தலை விட, கடந்த எம்பி தேர்தலில் ஸ்ரீரங்கம் நகரில் 7000 ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளோம் என்றார். அப்போது திடீரென வட்ட செயலாளர் ஜனாவும், அவரது ஆதரவாளர்களும் எழுந்து சத்தம் போட்டதோடு பகுதி செயலாளர் ராம்குமாரை தாக்க ஓடிவந்தனர். அருகில் இருந்த கட்சியினர் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்த முயன்றனர். உடனே அமைச்சர் நேரு எழுந்து அனைவரும் அமருமாறு சத்தம் போட அனைவரும் அமர்ந்தனர்.. இந்த மோதலால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
