Skip to content

திருச்சி அருகே மாரியம்மன் கோவிலில் 5 லட்சம் மதிப்பிலான நகை , பணம் கொள்ளை ….

திருச்சி மாவட்டம், துறையூர், உப்பிலியபுரம் அடுத்த த.முருங்கப்பட்டியில் ஆத்தூர் மெயின் ரோடு அருகில் அமைந்துள்ளது கொங்கு மாரியம்மன் கோவில் இக் கோவிலில் ராஜேந்திரன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் தினமும் காலை மாலை என இரு வேளையும் கோவிலைத் திறந்து பூஜை செய்வது வழக்கம்.

நேற்று வழக்கம் போல மாலை 6 மணிக்கு கோவிலைத் திறந்து பூஜை செய்து விட்டு இரவு 8 மணிக்கு

கோவிலைப் பூட்டி விட்டு சென்றார். இன்று காலை 6 மணிக்கு கோவிலைத் திறக்க வந்த போது கோவில் கிரில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டும் மூலஸ்தான கதவும் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி ராஜேந்திரன் உள்ளே சென்று பார்த்த போது கோயிலின் இரும்பு உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

மேலும் கருவறையில் மாரியம்மனுக்கு சாற்று படி செய்யப்படும் சுமார் 4 லட்சம் மதிப்பிலான முழு வெள்ளிக் கவசம் , அம்மன் கழுத்தில் இருந்த2 பவுன் தங்கத்தாலி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்த பூசாரி கோவில் முக்கியஸ்தர்களிடம் தகவல் அளித்தார்.

மேலும் கோவிலுக்குள்ளும் , வெளியிலும் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் உள்ளிட்டவற்றின் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இது பற்றி தகவலறிந்து உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று நான்கு மாதமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே ஊரில் பேருந்து நிலையம் முன்பு உள்ள மாரியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற நிலையில் மீண்டும் இதே போன்ற சம்பவம் த.முருங்கப்பட்டியில் அதிலும் கோயிலை மட்டுமே குறி வைத்து நடந்துள்ளதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உப்பிலியபுரம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கோவில்களை குறிவைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாக வருவதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!