கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் கரூரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள்,தவெக வழக்கறிஞர், நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட நபர்களை மீட்கும் பணிக்காக வருகை புரிந்த தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என 33 நபரிடம் விசாரணை நடத்தினர்.
தவெக பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு காயமடைந்த நபர்களிடம் இன்று மூன்றாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டு நாட்களில் 11 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று மூன்றாவது நாளாக கூட்ட நெரிசலில் காயமடைந்த 4 நபர்கள் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.
மேலும் தற்போது கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக கரூர் மின்வாரிய அதிகாரிகள் இரண்டு பேர் ஆஜராகி உள்ளனர்.
கரூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பிய நிலையில் இன்று விசாரணைக்கு ஆவணங்களுடன் ஆஜராகி உள்ளனர்.

