Skip to content

மத்திய அரசு கொண்டுவரும் ஆன்லைன் சட்டம், சூதாட்டத்தை பாதுகாப்பதாக இருந்தால் எதிர்ப்போம்…அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து   சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு ஆன்லைன் ரம்மி தொடர்பான அறிக்கை வெளியிட்டு, 15 தினங்களுக்குள் கருத்துக்களை கூற தெரிவித்துள்ளது.
அதை நான் இன்னும் படித்துப் பார்க்கவில்லை, படித்துவிட்டு அது குறித்து விளக்கம் கூறுகிறேன். ஆன்லைன் ரம்மி சூதாட்டங்களை நடத்துபவர்களை பாதுகாக்கும் சட்டமாக இருக்கக் கூடாது.

தமிழக அரசின் நோக்கம் முழுமையாக ஆன்லைன் ரம்மியை விளையாட்டுகள் தடை செய்ய வேண்டும் என்பதுதான். வரைவு சட்டத்தை முழுமையாக படித்தபின் எங்கள் கருத்தை கூறுகின்றோம். தமிழக அரசு கொண்டுவந்துள்ள ஆன்லைன் ரம்மி தடை சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இதனை அடிப்படையாக வைத்து மத்திய அரசு இச்சட்டத்தை கொண்டு வந்தது என்றால் வரவேற்கத்தக்கது. இதனை விட்டு மத்திய அரசு ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களை பாதுகாக்கும் சட்டமாக அதை கொண்டு வந்தால் அது கண்டிக்கத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன் குறிச்சியில் வருகின்ற 6ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் காளைகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது தான் மிகச்சிறந்தது அதைப்பற்றி எந்த ஒரு விமர்சனமும் செய்ய வேண்டாம்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் முழு காப்பீடுடன் நடைபெறுகின்றது. அதில் போட்டியை நடத்துபவர்கள் இன்சூரன்ஸ் செய்து இருப்பதால் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்குமே அது பொருந்தும் எனவே தனியாக ஒரு காப்பீடு செய்யத் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!