உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் நகரில் கெதியா நகர் அருகே பவாளி-ஹல்துவானி சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 4 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில், கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில், காரில் இருந்த 2 பேர் பலியானார்கள். அதுல் துபே (26) மற்றும் ஷியாம் (32) ஆகிய 2 பேர் காயமடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்து, மீட்பு குழுவினர் உடனடியாக சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவர்கள் தக்க தருணத்தில் செயல்பட்டு, 2 பேரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ஹல்துவானி நகரில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பலியானவர்கள் அங்கித் சவுத்ரி மற்றும் அபிராஜ் என அடையாளம் காணப்பட்டனர். பள்ளத்தில் விழுந்த அதிர்ச்சியில் அவர்கள் பலியாகி உள்ளனர். அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

