திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது. அதனை ஒட்டி தமிழகம் முழுவதும் இருக்கும் திமுக தொண்டர்கள் திருச்சி சென்றுகொண்டு இருக்கின்றனர்.
இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தாலுகாவிலிருந்து 20க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்க வேனில் சென்றுள்ளனர்.
திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, தஞ்சாவூர் விளார் புறவழிச் சாலை அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்தானது.
இந்த விபத்தில் வேனில் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, அருகில் இருந்தவர்கள் வேனில் இருந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தஞ்சாவூர் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

