உறுப்புகளை கொடையளித்த வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி 73-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராகவும், நகரமைப்பு, அபிவிருத்தி குழுத் தலைவராகவும் இருப்பவா் டி.சோமு. இவரது மனைவி சுகன்யா. இவா்களது 8 வயது மகள் வெண்பா, கடந்த 23ம் தேதி ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு நினைவிழந்தாா்.மருத்துவர்களின் பரிசோதனையில் இருந்த சிறுமி 24ம் தேதி மூளைச்சாவு அடைந்தார்.இதைத்தொடர்ந்து வெண்பாவின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 27) கோவை வந்த நிலையில் வெண்பாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள்.
பெற்றெடுத்த அன்பு மகளை இழந்த வலியையும் தாங்கிக் கொண்டு, மாந்தநேயத்தோடு அந்தக் குழந்தையின் உடலுறுப்புகளைக் கொடையளித்த பெற்றோர் திரு. சோமு மற்றும் திருமிகு. சுகன்யா ஆகியோருக்கு நமது அன்பு ஆறுதலாய் துணை நிற்கட்டும்!
திரு. சோமு அவர்கள் நமது திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகியாக இருந்து மக்களுக்குத் தொண்டாற்றுவதில் பெருமை கொள்கிறேன்.
உடலுறுப்புகளைக் கொடையளிப்பது குறித்து நான் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அதேபோல், கொடையாளரின் இறுதி நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் எனக் கடந்த 23-09-2023 அன்று அறிவித்திருந்தேன். இதனைத் தொடர்ந்து, தங்களது உடலுறுப்புகளைக் கொடையளிப்போரின் எண்ணிக்கை தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மட்டுமல்ல; இந்திய மாநிலங்களிலேயே அதிகளவுக்கு அதிகரித்து வருகிறது. இதுவரையில், இறப்பிலும் பலருக்கு வாழ்வளித்த 653 பேருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அறிவியல் மனப்பான்மையோடு சிந்தித்துச் செயல்படும் தமிழ்நாடு வளரட்டும்!
இறப்பிலும் புதுவாழ்வளிக்கும் இந்தக் கருணை உள்ளங்களே போற்றுதலுக்குரிய தியாகிகள்!,”இவ்வாறு தெரிவித்தார்.

