இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வரும் செப்டம்பர் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்தவரும், மகாராஷ்டிரா கவர்னருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், அவர் பாஜக வேட்பாளர் என்பதால் அவரை திமுக ஆதரிக்காது என்று திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஒரு தமிழரை தேர்வு செய்ததில் மகிழ்ச்சி. இந்தியா கூட்டணி தேர்வு செய்யும் வேட்பாளரை திமுக ஆதரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகருஷ்ணன், பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
துணை ஜனாபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி தொடங்கி விட்டது. 21ம் தேதி கடைசி நாள். சி.பி. ராதாகிருஷ்ணன் எப்போது மனு தாக்கல் செய்வார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சி.பி. ராதாகிருஷ்ணன் திருப்பூரைச் சேர்ந்தவர் இவரது முழு பெயர் சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன், இவரது மனைவி பெயர் சுமதி, 2 குழந்தைகள் உள்ளனர். மகாராஷ்டிராவின் ஆளுநராக 2024-ம் ஆண்டு ஜூலை 31 அன்று பதவியேற்றார். அதற்கு முன்பு, அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் நியமிக்கப்பட்டார். ஒன்றரை ஆண்டுகள் அங்கு கவர்னராக பணியாற்றினார்.
பாஜக தேசிய செயலாளர், தேசிய நிர்வாக குழு உறுப்பினர், கேரள மாநில பாஜக பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.அரசியல் வாழ்க்கையை தாண்டி, ராதாகிருஷ்ணன் கல்லூரி காலத்தில் டேபிள் டென்னிஸில் சாம்பியனாகவும், ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட் மற்றும் கைப்பந்து அவருக்கு பிடித்தமான விளையாட்டுகள்.
இந்தச் சூழலில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இநதியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்றும் ஆலோசனை நடக்கிறது. இன்று அல்லது நாளை இந்தியா கூட்டணி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் எம்.பிக்கள் மட்டுமே ஓட்டு போடுவார்கள். தற்போது மக்களவையில் ஒரு எம்.பி., மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடங்கள் காலியாக உள்ளன. எனவே, வரும் தேர்தலில் 782 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற 50 சதவீத எம்.பி.க்களின் ஆதரவு தேவை. இதன்படி, 391 எம்.பி.க்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், புதிய குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.
நாடாளுமன்றத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்களும், இந்தியா கூட்டணிக்கு 312 எம்.பி.க்களும் உள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், அந்த கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி. இதில் வெற்றி பெறுபவர் 2 ஆண்டுகள் மட்டுமே இந்த பதவியில் இருப்பார்கள்.
“தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்தே, கொங்கு மண்டலத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உயரிய பதவியை பாஜக அறிவித்துள்ளது. இதுவும் பாஜகவின் தேர்தல் கணக்கு என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.