மதுரையில் நாளை தவெகவின் 2வது மாநில மாநாடு நடக்கிறது. தூத்துக்குடி ரோட்டில் உள்ள பாரபத்தி என்ற இடத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பில் மாநாடு திடல் உருவாக்கப்பட்டது. நாளை மாநாடு நடப்பதையொட்டி இன்று காலை மாநாட்டு திடலில் யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநாட்டு முகப்பில் 100 அடி உயர இரும்பு கொடி கம்பத்தை நடும் பணி நடந்தது. கிரேன் மூலம் இந்த பணி நடந்தது. கம்பத்தை தூக்கிநிறுத்தும்போது திடீரென கம்பம் கீழே சாய்ந்தது. அப்போது அங்கு இருந்த பணியாளர்கள், மற்றும் பார்வையாளர்கள் கூச்சல் போட்டுக்கொண்டு தப்பி ஓடினர். கம்பம் ஒரு காரின் மீது விழுந்தது. இதில் கம்பமும், அந்த காரும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக காருக்குள் யாரும் இல்லை. தரையில் விழுந்த கம்பம் சேதமடைந்து விட்டதால் வேறு கம்பம் நடப்பட்டு கொடியேற்றப்படலாம் என தெரிகிறது. கொடிகம்பத்தின் அடிபகுதியில் உள்ள போல்ட் நட்டுகள் சரியாக டைட் செய்யப்படாததால் கம்பம் அடியோடு சாய்ந்து விட்டதாக கூறப்படுகிறது.
கொடிகம்பம் சாய்ந்ததில் சேதமடைந்த காரை தார்ப்பாய் போட்டு மூடி நம்பரை பிளேட்டை கழற்றிவிட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மாநாட்டையொட்டி தவெக தலைவர் நடிகர் விஜய் ஏற்கனவே மதுரை வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மாநாடு நாளை பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி இரவு 7.25 மணி வரை நடக்க இருக்கிறது. ஆனால் காலையில் இருந்தே அந்த பகுதியில் மக்கள், கட்சி தொண்டர்கள் கூடுவார்கள் என்பதால் மாநாடு நடைபெறும் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.