கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவமனையில் சென்று நான் பார்த்தது போல, அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும் சந்தித்தனர் – எனக்கு சிபிஐ விசாரணைக்கு சம்மன் வந்தது போல, அனைவருக்கும் சம்மன் வருமா என்று கரூர் செய்தியாளர் சந்திப்பில் செந்தில் பாலாஜி கேள்வி.
கரூர் மாவட்டம், ஈரோடு சாலையில் அமைந்துள்ள கோதை நகர் பகுதியில் ரூபாய் 38.50 கோடி மதிப்பீட்டில், 64 ஆயிரம் சதுரடி பரப்பளவுடன் மினி டைடல் பூங்கா கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தலைமையில், கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி,
சிபிஐ இமெயில் மூலமாக எனக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. 17ஆம் தேதி நேரில் ஆஜராகி அவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்க இருக்கிறேன். விசாரணையில் என்ன மாதிரியான கேள்விகளை கேட்கிறார்கள், எந்த அடிப்படையில் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நிகழ்ச்சியை நடத்தியது ஒரு தனிப்பட்ட இயக்கம். ஏற்பாடு செய்து கொடுத்தது காவல்துறை. இந்த நிலையில் எனக்கும் சம்மன் வந்தது ஆச்சரியமாக இருக்கிறது. விசாரணைக்கு டெல்லிக்கு வரச்சொல்லி அழைப்பு வந்துள்ளது.
சிபிஐ விசாரணைக்கு எனக்கு அழைப்பு வந்தது குறித்து அவர்களுக்கு என்ன கஷ்டம். பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் நான் எப்படி சென்று பார்த்தேனோ, அதேபோல அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் சென்று பார்த்தார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு மட்டும் சம்மன் அனுப்பப்பட்டது போல, அனைவருக்கும் சமன் அனுப்பப்படுமா என்றும், அதுதான் உரிய நடவடிக்கையாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

