ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே மாதம் 25 ஆம் தேதி அன்று கேரளாவில் தொடங்கியது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்கு அதிக கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் முதல் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இந்த தொடர் கன மழையால் கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆறு, வால்பாறை கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, பவானி ஆறு, ஆழியாறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ள நிலையில், கோவை குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையிலும் தொடர் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தொடர் மழை காரணமாக கோவை குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க விதிக்கப்பட்ட தடை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறுகளில் ஏற்பட்டு உள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளனர்.