மேற்காசிய மோதல்களால் ஏற்பட்ட பதற்ற நிலையால், கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்ந்தது. வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்தது. இதனால், மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். எனினும், இந்தியாவுக்கு கியாஸ் சிலிண்டர்களை விற்பனை செய்வதற்காக அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நார்வே நாடுகள் அணுகியுள்ளன என அரசு வட்டாரம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் அடுத்து நாட்டில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்போது வேண்டுமென்றாலும் உயர கூடும் என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே காணப்படுகிறது. இது எப்போது நடைபெறும்? அதற்கான சாத்தியம் என்ன? என்பது பற்றி அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.
இதன்படி, பீப்பாய் ஒன்றிற்கு 130 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு கூடுதலாக கச்சா எண்ணெய் விலை உயரும்போது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதற்கான சாத்தியம் உள்ளது.
ஆனால், நாட்டில் எந்த பெட்ரோல் பல்க்கிலும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இல்லை என தகவல் தெரிவிக்கின்றது. அதனால், தற்போது விலை உயர்வு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு வட்டாரங்கள் தொடர்ந்து கூறும்போது, கச்சா எண்ணெய்க்கான பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டாலருக்குள்ளேயே இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதேபோன்று, ஹார்மூஸ் ஜலசந்தியை விட பிற வழிகளில் கச்சா எண்ணெய்யை பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தன.

