அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விமல், புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். கிராமப்புற பின்னணியில், காமெடி எண்டர்டெயினராக உருவாகும் இந்தப்படத்தை அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல் தோஸ் மற்றும் மனிஷ் கே தோப் ஆகியோர் இயக்குகின்றனர். கதாநாயகியாக முல்லை அரசியும், சேத்தன் , சரவணன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடிக்கின்றனர்.
எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். பார்க்கிங் வெற்றிப்பட ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரான்சிஸ் நெல்சன் சேவியர் மற்றும் மருது பெரியசாமி வசனம் எழுதியுள்ளனர். எடிட்டிங் மதன், கலை இயக்கம் ராஜ்கமல், ஸ்டண்ட் பீனிக்ஸ் பிரபு, எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் ரஞ்சித் கருணாகரன் ஆகியோர், தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.
இந்தப்படத்தின் பூஜை காரைக்குடியில், படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான முறையில் நடைபெற்றது. பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கிராமத்து பின்னணியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த மற்ற தகவல்கள், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற ’ககனச்சாரி’, ‘பொன்மேன்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ளது அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் நிறுவனம். இந்நிலையில் விமல் நடிக்கவுள்ள இந்த புதிய படம் மூலம், தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ளனர். தயாரிப்பாளர் விநாயகா அஜித் இப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.