திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் கட்டிடத்தின் மேல் பூச்சி உதிர்ந்து விழுந்து பெண் காயம் ! மருத்துவரின் அலட்சியமான பதிலால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த பத்மா என்பவரின் மகள் நவீனா, தனது ஆறு மாத குழந்தையை காய்ச்சல் மற்றும் சளி காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் பத்மா மற்றும் அவரது மகள் நவீனா நான்கு மாத குழந்தையுடன் மருத்துவமனையில் ஓய்வெடுத்து கொண்டிருந்த போது, திடீரென அரசு மருத்துவமனை கட்டிடத்தின் மேற்பகுதியில் இருந்து பூச்சி உதிர்ந்து பத்மா தலையின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் பத்மா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவருக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளன.
இதுகுறித்து பத்மா தரப்பில், “பூச்சி குழந்தையின் மீது விழுந்திருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். நாங்கள் தப்பியதால் காயத்துடன் உயிர் தப்பினோம்” என வேதனையுடன் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இதற்கு பதிலளித்த மருத்துவர், “இது ஒரு விபத்து. சாலையில் செல்லும் போது திடீரென வண்டி மோதுவது போல, இதுவும் ஒரு விபத்துதான். இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது
மருத்துவரின் இந்த அலட்சியமான அணுகுமுறை காரணமாக பத்மா மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர், பத்மாவின் நிலையை சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையின் கட்டிட பராமரிப்பு குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சமும் சோகமும் ஏற்பட்டுள்ளது.
மேலும், அரசு மருத்துவமனை போன்ற முக்கிய சுகாதார நிலையங்களில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாகவும், மருத்துவரின் அலட்சியமான பதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் பத்மா வருத்தம் தெரிவித்துள்ளார்

