கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி அன்று 6 சட்டமன்றகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து பரமபதம் விளையாடி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசியதாவது:
எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்குரிமை பெற்ற அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக விழிப்புணர்வு பேரணி, தேர்தல் விழிப்புணர்வு குறித்த பேச்சுப்போட்டி, உறுதிமொழி, ரங்கோலி, மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கல்லூரிகளில் பயிலும் முதல் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்த கருத்தரங்கம், முட்டம் கடற்கரையில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுவர் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் மகளிர் திட்டத்தின் சார்பில் ‘பரமபதம்’ விளையாட்டினை மகளிர் சுயஉதவிக்குழுக்கள் விளையாடி, அனைவரையும் கவரும்படி, தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பரமபதம் விளையாட்டில் உள்ள 36 கட்டங்களிலும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள், படங்கள் உள்ளிட்டவைகள் இடம்பெற்றிருந்தன.
ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதில் ஒவ்வொரு வாக்காளரின் பங்கும் முக்கியமானது. களப்பணியாளர்கள் இந்த விளையாட்டின் மூலம் கற்றுக் கொண்ட கருத்துக்களை கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களிடம் எளிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டும்.
இதன் மூலம் குமரி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் நீங்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள வாக்குரிமை பெற்ற அனைவரையும் இதுபோன்ற பாரம்பரிய விளையாட்டுகள் வாயிலாக வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். உதவி திட்ட அலுவலர்கள் (மகளிர் திட்டம்) வளர்மதி, கலைசெல்வி, சுய உதவிக்குழுக்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

