தூத்துக்குடி தாளமுத்துநகர் வடக்கு சோட்டையன்தோப்பு தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ஹரி (21), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் முள்ளக்காடு சந்தோஷ்நகரில் ஒரு புதிய வீடு கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மின்சார மோட்டாரை தூக்கும்போது அதிலிருந்து மின்சாரம் தாக்கியுள்ளது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை முள்ளக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

