Skip to content

வீட்டு சிலிண்டரை திருடி செல்லும் வாலிபர்.. பரபரப்பு

திருவள்ளூரில் வீட்டு சிலிண்டரை திருடிக்கொண்டு பைக்கில் செல்லும் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுசம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர். ஈரான், இஸ்ரேல், அமெரிக்க போர் பதற்றம் மற்றும் ஒன்றிய பாஜ அரசின் தவறான முடிவால் தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமான பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது. தனியார் ஏஜென்சி நிறுவனத்தில் வீட்டு சிலிண்டர்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இதன்காரணமாக பல பகுதிகளில் அதிக விலைக்கு சிலிண்டர் விற்பனை மற்றும் சிலிண்டர் திருட்டு நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் பத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷாயின்ஷா (42). இவர் டிரைவர். இவரது வீட்டில் சிலிண்டர் வைத்திருந்தார். இன்று அதிகாலை அவர் எழுந்தபோது தனது வீட்டில் உள்ள சிலிண்டர் காணாமல்போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீடு முழுவதும் தேடிப்பார்த்தும் சிலிண்டர் கிடைக்கவில்லை. இதுசம்பந்தமாக அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனிடையே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ஒரு வாலிபர் தனது பைக் பின்னாடி சிலிண்டரை தொங்கவிட்டப்படி திருடிச்செல்வது பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில், திருவள்ளூர் நகர போலீசில் டிரைவர் புகார் கொடுத்துள்ளார். இதுசம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து சிலிண்டர் திருடிச்சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!