திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் பள்ளிக்குச் சென்ற மாணவனை கத்தியால் கழுத்தை வெட்டிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். வத்தலகுண்டு அருணாச்சலப்புரத்தை சேர்ந்தவர் முனியப்பன் ஹோட்டல் நடத்தி வருகிறார் இவருடைய மகன் முனீஸ்வரன் (11) அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் முனீஸ்வரன் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளான். வடக்கு தெரு பகுதியில் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த இரண்டு இளைஞர்கள் முனீஸ்வரன் கழுத்தை நோக்கி கத்தியை வீசியுள்ளனர். முனீஸ்வரன் நல்வாய்ப்பாக சற்று விலகியதால் கழுத்தில் கத்தி ஆழமாக பாயாமல் கிழித்து விட்டு சென்றது. ரத்தம் சொட்ட சொட்ட நின்ற பள்ளி மாணவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் .
இதனைத் தொடர்ந்து நிகழ்விடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே முதல் கட்ட விசாரணையில் முனீஸ்வரன் சொத்து பிரச்சனை காரணமாக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. பள்ளி மாணவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் வத்தலகுண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.