கரூர் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை திறப்பு விழா இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, இந்த பள்ளி கட்டிடத்தை திறக்க சென்றார்.
அப்போது அந்த கிராம மக்கள் திரண்டு நின்று செந்தில் பாலாஜியை வரவேற்றனர். ஊர் மக்கள் பொன்னாடை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் வரவேற்றனர். பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.
அப்போது செந்தில் பாலாஜி, பள்ளி குழந்தைகளிடம் பெயர்களை கேட்டார். காலையில் சாப்பிட்டீர்களா என பரிவோடு கேட்டார். நன்றாக படிக்க வேண்டும் என ஊக்கமளித்தார். பின்னர் குழந்தைகள் அனைவருக்கும் அவரே சாக்லேட் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.அதைத்தொடர்ந்து ஒரு மாணவியை அழைத்து பள்ளியை திறக்கும்படி கூறி, அந்த மாணவியிடம் கத்தரியை கொடுத்தார். அந்த மாணவி பள்ளியை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் எம்எல்ஏ இளங்கோ மற்றும் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.