Skip to content

புதுகையில் 2 நாள் சிறுகதைப் பயிலரங்கு தொடங்கியது

  • by Authour
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் புதுக்கோட்டை ரெங்கம்மாள் சத்திரத்திலுள்ள அம்பிகா அறக்கட்டளை வளாகத்தில் இரு நாள் சிறுகதைப் பயிலரங்கு சனிக்கிழமை (ஜூன் 14) காலை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே. கங்கா தலைமை வகித்தார். மாநிலப் பொதுச்செயலர் த. அறம் தொடக்கவுரையாற்றினார். மாநிலப் பொருளாளர் ப.பா. ரமணி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோ. கலியமூர்த்தி, முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசியச் செயலர் டி.எஸ். நடராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா நோக்கவுரை நிகழ்த்தினார். முதல் அமர்வில், ‘சிறுகதை உருவாக்கம்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் சு. வேணுகோபால், இரண்டாம் அமர்வில் ‘சிறுகதைகளில் காலம், நிலம்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் எம்.எம். தீன், மூன்றாம் அமர்வில் ‘தென்னிந்தியச் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ். செந்தில்குமார் ஆகியோரும் பேசினர். பேரா. கரு. முருகன், எழுத்தாளர் சோலச்சி, பேரா. கணபதி இளங்கோ ஆகியோர் இந்த மூன்று அமர்வுகளையும் நெறிப்படுத்தினர். ஏ.ஆர். முருகேசன், ஆங்கரை பைரவி, கோவில் குணா ஆகியோரும் பேசினர். தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்பாளர்களும் விவாதித்தனர். குறும்படம் திரையிடல்… சனிக்கிழமை இரவு நடைபெற்ற குறும்படம் திரையிடல் அரங்குக்கு பெருமன்றத்தின் புதுக்கோட்டை மாநகரத் தலைவர் மூட்டாம்பட்டி ராசு தலைமை வகித்தார். பெருமன்றத்தின் மாவட்டச் செயலர் சி. பாலச்சந்திரன் ஒருங்கிணைத்தார்.புதுகை பிலிம் சொசைட்டி தலைவர் எஸ். இளங்கோ ஏற்பாட்டில் குறுபடங்கள் திரையிடப்பட்டன. தொடர்ந்து இரண்டாம் நாளாக பயிலரங்கு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இரா. காமராசு, பா. ஆனந்தகுமார், எழுத்தாளர் கண்மணி ராசா, எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர். மாநிலம் முழுவதும் இருந்தும் சிறுகதை எழுத்தாளர்கள் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றுள்ளனர்.
error: Content is protected !!