Skip to content

தஞ்சை மாவட்ட 2வது பெண் கலெக்டராக பிரியங்கா பதவியேற்பு

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக தீபக் ஜேக்கப் பணியாற்றி வந்தார். அவர் பணியிடம் மாற்றப்பட்டார்.  இதையடுத்து  புதிய கலெக்டராக மகளிர் திட்ட செயல் இயக்குனராக பணியாற்றி வந்த பிரியங்கா  தஞ்சை கலெக்டராக   நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை  கலெக்டர் அலுவலகத்தில் பதவியேற்றார்.

பதவியேற்றதும் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை மாவட்டம் விவசாயப் பகுதி . அதனால் விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் பெற்று தர பாடுபடுவேன். பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்  பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.

அரசின் நல திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன். குறுவை சாகுபடி குறைந்த நிலையில் சம்பா சாகுபடியை விவசாயிகள் தைரியமாக தொடங்க தமிழக அரசின் ஒத்துழைப்போடு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தஞ்சை மாவட்டத்தில் தற்போது பெண் கலெக்டராக பிரியங்கா  பொறுப்பேற்றுள்ளார்.  தஞ்சை மாவட்டத்திற்கு இவர் 2 வது பெண் கலெக்டர் ஆவார். இதற்கு முன்  1984ல்  ஓ.பி.சோசம்மாள் என்பவர்  ஆறரை மாதம்  தஞ்சை மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றி உள்ளார். அதற்கு பின்னர் 40 ஆண்டுகள் கழித்து இப்போது தான் பெண் கலெக்டர் தஞ்சைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரியங்கா, 2015ல் ஐஏஎஸ் ஆக தேர்ச்சி பெற்றவர். பயிற்சி ஆட்சியராக கோயம்புத்தூரில் பணியாற்றினார். ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை சார் ஆட்சியராக பணி செய்தார். அதன் பிறகு திருப்பத்தூரில் சார் ஆட்சியர், கூடுதல் இயக்குனர் (வளர்ச்சி ) மதுரையில் பணி செய்தார். பின்னர் செயல் இயக்குனராக மகளிர் மேம்பாட்டு இயக்குநகரத்தில் பணியாற்றியவர். தற்போது தஞ்சை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!