மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலா பச்சன். மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய இவரது மகள் பிரேர்னா பச்சன். நேற்று இரவு பிரேர்னா தனது நண்பர்கள் மூன்று பேருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். இந்தூர் மாவட்டம் ராணாமண்டல் பகுதியில் கார் சென்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பிரேர்னா பச்சன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் என மொத்தம் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். காரில் இருந்த மற்றொரு இளம்பெண் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்த மூவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

