சென்னை அண்ணா பல்கலை மாணவி, அதே வளாகத்தில், கடந்தாண்டு டிசம்ப் 23ம் தேதி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அடித்து விரட்டி விட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவி அளித்த புகாரை அடுத்து, கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன், (37 )என்பவரை, கடந்தாண்டு டிச., 25ல் கைது செய்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ஞானசேகரனுக்கு எதிராக, நுாற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் 70க்கும் மேற்பட்ட சான்று ஆவணங்களை, கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு விசாரணை, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு, கடந்த மார்ச் 7ல் மாற்றப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள், கடந்த 23ல் நிறைவு பெற்றதை அடுத்து, கடந்த மே 28ம் தேதி ஞானசேகரன் குற்றவாளி என நீதிபத் ராஜலட்சுமி தீாப்பளித்தார். அத்துடன் தண்டனை விவரங்களை ஜூன் 2ம் தேதி அறிவிப்பதாகவும் கூறினார்.
அப்போது ஞானசேகரன் தனக்கு தண்டனையை குறைத்து வழங்கும்படி கூறினார். ஞானசேகரன் மீதான 11 குற்றங்களிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார்.
அதன்படி இன்று தண்டனை விவரம் அறிவிக்கபட்டது. இதற்காக காலையில் ஞானசேரகன் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார். நீதிபதி 10.30 மணிக்கு கோர்ட்டுக்கு வந்தார். இருதரப்பு வக்கீல்களும் கோர்ட்டுக்கு வந்திருன்தனர்.
சரியாக 10.30 மணிக்கு நீதிபதி தண்டனையை அறிவித்தார். அதன்படி ஞானசேகரனுக்கு 30 வருடங்கள் தண்டனை என அறிவித்தார். குற்றவாளி ஞானசேகரனுக்கு குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை என்றும் அறிவித்தார். அத்துடன் ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்தார்.