திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் டாக்டர் பிரபுசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கைகளான ஊதிய உயர்வு, தகுதிக்கேற்ப பதவி உயர்வு மற்றும் விருப்ப ஓய்வு பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன் முதல்கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் கூடுதல் செயலருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தத் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, சீனியாரிட்டி முறையைச் சீரமைக்க வேண்டும், விருப்ப ஓய்வு திட்டத்தை அனைத்துத் துறை மருத்துவர்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான கடினப் பணி ஊக்கத்தொகையை 3,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் மற்றும் பதவி உயர்வுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், வரும் பிப்ரவரி 2-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தர்ணா போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 6-ம் தேதி புறநோயாளிகள் பிரிவில் 2 மணி நேரப் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என்றும், அதன்பிறகும் சுமூக முடிவு எட்டப்படவில்லை எனில் பிப்ரவரி 7-ம் தேதி மாநில செயற்குழுவைக் கூட்டி போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் டாக்டர் பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

