அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இதனிடையே, திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 22ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழா, சூரசம்ஹாரத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். சூரசம்ஹாரத்தையொட்டி பாதுகாப்புப்பணியில் 4 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருச்செந்தூர் கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 250க்கும் மேலான சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மேலும், 20 டாக்டர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு 14 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் உள்ளன. வெளியூர் பக்தர்கள் வசதிக்காக தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல 45 இலவச பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடற்கரையில் பக்தர்கள் பாதுகாப்புக்காக நீச்சல் வீரர்கள் 80 பேர் தயார் நிலையில் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

