திருச்சி மன்னார்புரத்தில் இன்று காலை கணவனுடன் வேலைக்குச் சென்ற அரசு மருத்துவமனை செவிலியரிடம் ஐந்து பவுன் நகை பறித்துச் சென்ற குல்லா அணிந்து வந்த மர்ம கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருச்சியில் இன்று அதிகாலை நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-
திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் விக்டர்.எலக்ட்ரீசியன் .இவரது மனைவி கீர்த்தனா ( வயது 25).இவர் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.தினமும் இவரை வேலைக்கு செல்வதற்கு பஞ்சப்பூர் பஸ்நிலையத்தில் இவரது கணவர் பஸ் ஏற்றி விடுவது வழக்கம். வழக்கம் போல் இன்று காலையில் ஜான்விக்டர் தனது மனைவி கீர்த்தனாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு பஞ்சப்பூர் பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.கணவன், மனைவி இருவரும் இன்று காலை சுமார் ஏழு முப்பது மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் மன்னார்புரம் மேம்பால பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பனி குல்லா அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்த இரண்டு மர்ம கொள்ளையர்கள் கீர்த்தனாவின் கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலி பறித்துவிட்டு, புதுக்கோட்டை நோக்கி தப்பி சென்றுவிட்டனர்.கீர்த்தனா திருடன் திருடன் என அலறி கூச்சலிட்டார்.அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர்.அதற்குள் மர்ம கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.திருச்சியில் இன்று காலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஜான் விக்டர் தனது மனைவியுடன் சென்று கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் வேலைக்கு செல்லும் பெண்களை குறி வைத்து இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம கொள்ளையர்கள் அடிக்கடி செயின்களை பறித்துவிட்டு தப்பி ஓடும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் திருச்சி மாநகரில் வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும் பீதியில் உள்ளனர். இனியாவது திருச்சி மாநகர போலீசார் தீவிரமாக ரோந்து சென்று, கண்காணித்து கொள்ளையர்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.