பஞ்சாபில் இருந்து பீகார் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ், உத்தரப்பிரதேச மாநிலம் புர்வாஞ்சல் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவிற்கு சுமார் 40 பயணிகளுடன் தனியார் ஆம்னி பஸ் ஒன்று இன்று புறப்பட்டுச் சென்றது. இந்த பஸ் உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டம் கொசான்கஞ்ச் பகுதியில் உள்ள புர்வாஞ்சல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 21 பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

