கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குற்றிப்புரம் அருகே எடச்சலம் பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம். இவரது மனைவி ஷஹ்லா. இந்த தம்பதியின் மகள்கள் லஸ்னா(7), மின்சா. இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை பிரிட்ஜில் பதப்படுத்தி வைத்திருந்த உணவை குடும்பத்தினர் சாப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து அவர்களுக்கு திடீரென வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுமி லஸ்னா பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் பிரிட்ஜில் பதப்படுத்தி வைத்திருந்த உணவு கெட்டுபோனதன் காரணமாக அதை சாப்பிட்டு குடும்பத்தினருக்கு உடல்நலபாதிப்பு ஏற்பட்டு சிறுமி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், ஹக்கீமின் வீட்டிற்கு சென்று அவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரிட்ஜில் பதப்படுத்தி வைத்திருந்த உணவை சாப்பிட்ட 7-வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

