டெல்லியில் இருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் டெல்லியிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டன.
டெல்லியில் இருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகரத்துக்கு, நேற்று(ஜூன் 19) ஏர் இந்தியாவின் ஏ320 விமானம் 130 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. நாடுவானில் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்பக் கோளாரு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சில நிமிடங்களிலேயே மீண்டும் அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இதேபோல் டெல்லியில் இருந்து லே நகருக்கு சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நேற்று அங்கு தரையிறங்க முடியாமல் மீண்டும் டெல்லிக்கு திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானிகள், ஊழியர்கள் மற்றும் பயணிகள் என 180 பேர் அந்த விமானத்தில் பயணித்தனர்.
மேலும், நேற்று மற்றொரு நிகழ்வாக ஹைதராபாத்தில் இருந்து திருப்பதி புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்திலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் விமானம் ஹைதராபாத் திரும்பி அவரசமாக தரையிறங்கியது.
இதேபோன்று குவாகாத்தியில் இருந்து சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானம் பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. குவாகாத்தியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் திடீரென எரிபொருள் குறைந்தது. எரிபொருள் குறைவாக இருந்தது விமானிக்கு தெரிய வந்ததை அடுத்து பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கினார். 7.45க்கு வரவேண்டிய விமானம் பெங்களூருவில் எரிபொருள் நிரப்பிவிட்டு 3 மணி நேரம் தாமதமாக இரவு 10.30க்கு சென்னை வந்தடைந்தது. இந்தநிலையில் இன்று சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படும் 8 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. துபாய் -சென்னை, டெல்லி-மெல்போர்ன், மெல்போர்ன்-டெல்லி, துபாய்-ஐதராபாத், புனே-டெல்லி செல்லும் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.