பாமகவின் தலைவர் இனி நான் தான் என அந்த கட்சியை தொடங்கிய டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அன்புமணி ராமதாஸ், இனி செயல் தலைவராக இருப்பார் என்றும் ராமதாஸ் கூறினார். ஆனால் அதை அன்புமணி ஏற்கவில்லை. நானே தலைவராக நீடிக்கிறேன் என்ற கூறினார்.கட்சியின் தலைவர் பதவிக்கு தந்தையும், மகனும் போட்டியில் ஈடுபட்டுள்ள நிலையில் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் வன்னியா் மாநாடு வரும் 11ம் தேதி நடக்கிறது. . இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த வாரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்க வருமாறு அனைத்துக் கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கடந்த 26ம் தேதி மாநாட்டிற்கான பாடல் வெளியிடப்பட்டது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ், மாநாட்டு பாடலை வெளியிட்டார். அழைக்கிறார்.. அழைக்கிறார்.. நம்ம அன்புமணி அண்ணன் நம்மை அழைக்கிறார்.. என்ற வரிகளுடன் இந்த பாடல் தொடங்குகிறது.
இந்த பாடல் இடம் பெற்ற வீடியோவில் டாக்டர் ராமதாசின் படம் ஒரே ஒரு இடத்தில் மட்டும் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் வன்னியர் மாநாட்டுக்கு ராமதாஸ் நேற்று ஒரு பாடல் வெளியிட்டுள்ளார். அதில் அய்யா அழைக்கிறார் என பாடல் வரிகள் தொடங்குகிறது. இந்த வீடியோவில் அன்புமணி பெயரை இடம் பெறவில்லை.
மாநாட்டுக்கு இன்னும் 10 நாள் உள்ள நிலையில் தந்தையும், மகனும் போட்டி பாடல் வெளியிட்டுள்ளது கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.