தமிழ் திரைத்துறையில் போதைப்பொருள் பயன்பாடு பல காலமாக இருப்பதாக இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்திருக்கிறார்.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக ‘மார்கன்’ என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் 12-வது படமான ‘மார்கன்’ படத்தை அவரே சொந்தமாகத் தயாரித்து இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் விஜய் ஆண்டனியின் சகோதரியின் மகன் அஜய் திஷன் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் நடிகை பிரிகிடா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மார்கன்’ படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி படத்தின் புரோமோஷன் விழாவிற்கு நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ப்ரித்திகா, விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன் உள்ளிட்ட படக்குழுவினர் மதுரைக்கு வருகை தந்தனர். மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் மாலில் அமைந்துள்ள திரையரங்கில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு , “சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல. பல நாட்களாகவே போதைப்பொருள் பயன்பாடு உள்ளது. இந்தக் கூட்டத்தில் கூட யாராவது இருக்கலாம். காவல்துறை விசாரணை நடைபெறுகிறது. அதைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை” என்று தெரிவித்தார்.