நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்ட தொடர் வரும் 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாலை திருத்தப்பட்ட அட்டவணையை ஒரு பதிவின் மூலம் உறுதிப்படுத்தினார். அதில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, கூட்டத்தொடரை நீட்டிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த கூட்டத்தொடரில் காப்பீடு தொடர்பான மசோதா உட்பட பல மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த கூட்டத்தொடரை விட இந்த கூட்டத்தொடர் ஒன்றிய பாஜ அரசுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. குறிப்பாக பஹல்காம் தாக்குதல், இந்தியா- பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையீடு தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடந்த மாதம் வலியுறுத்திய நிலையில், தற்போது மழைக்கால கூட்ட தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்றம் கூட உள்ளதையொட்டி வரும் 19ம் தேதி அனைத்து கட்சிகள் கூட்டத்தை மத்திய அரசு கூட்டி உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தை சுமூகமாக நடத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்படும்.