பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி அந்த பகுதி மக்கள் பல ஆண்டாக போராடி வருகின்றனர். சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட நிலையில் பலுசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், பாகிஸ்தான் தரப்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து பலுசிஸ்தான் விடுதலைப் படையினர் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவத்தினர் மீதும், பொதுமக்கள் செல்லும் வாகனங்கள் மீதும் கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் பலுசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 29 பேர் நேற்று உயிரிழந்தனர். பலுசிஸ்தான் விடுதலைப் படையினர் கடந்த 12 மணி நேரத்தில் அவ்ரான், குவெட்டா, கலாத் ஆகிய மாவட்டங்களில் சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், ராணுவ மூத்த அதிகாரி மேஜர் ரபி நவாஸ் உள்பட 29 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.