தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலின் பதவி காலம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணி இப்போதே தொடங்கி விட்டது. முதல்கட்டமாக சட்டம் – ஒழுங்கு டிஜிபிக்கு தகுதியான 8 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் இன்னும் 2 வருடமாவது சர்வீஸ் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தான் இந்த பட்டியலில் இடம் பெற முடியும்.
தமிழக அரசு அனுப்பும் 8 பேர் கொண்ட பட்டியலில் தகுதியுள்ள 3 பேரை தேர்வு செய்து மத்திய அரசு, தமிழக அரசுக்கு அனுப்பும். அவர்களில் ஒருவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஜிபியாக (சட்டம் – ஒழுங்கு) நியமிப்பார். சீனியாரிட்டி அடிப்படையில் டி.ஜி.பிக்கள் சீமா அகர்வால், ராஜீவ் குமார் மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய மூவரும் முதலிடத்தில் உள்ளனர்.
இந்த மூன்று அதிகாரிகளும் மத்திய அரசில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். இவர்கள் 3 பேரையும் மத்திய அரசு பரிசீலித்து தமிழக அரசுக்கு அனுப்பலாம். பணி அனுபவம், தகுதி மற்றும் செயல்திறன் அடிப்படையில் இந்த 3 பேர் பட்டியலில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இருப்பினும் சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர் இடையே புதிய டிஜிபிக்கான போட்டி உள்ளதாகவும் அதில் சந்தீப் ராய் ரத்தோர் முந்துவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் போலீஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
காவல் துறையில் 14 டிஜிபி பணியிடங்கள் இருந்தாலும் சட்டம் – ஒழுங்கு டிஜிபியே தலைமை டிஜிபியாகவும், காவல் படை தலைவராகவும் செயல்படுவார். இது தான் அதிகாரம் மிக்க பதவி. எனவே இந்த பதவியை பிடிக்க கடும்போட்டி நிலவுவது வழக்கமான ஒன்று தான்.